தனிமையில் நடக்கையில்
எது எனக்கு இன்பம் நல்கும்? நீ இருக்கின்றாய்! என்பதொன்றே.
நான் தனிமையில் நடக்கையில், என்னோடு கைகோர்த்து கூட வரும் விரல்களை தேடுகிறேன்.
என் உடலின் மாற்றங்கள் ஒலிபரப்பு செய்தாலும், உணர்வின் வக்ரங்கள் விளம்பரம் செய்தாலும், என் அன்பையும் அதன் ஸ்பரிசத்தையும் நீ உணர்ந்திட முடியுமானால், உன்னை நான் காதலாக ஏற்றுக் கொள்வது பாக்கியம்.
இமை விலகும் இடைவெளியில் உன் முகம் தெரியுமானால் இமைக்கா நொடிகளில் உன்னை நான் எனக்குள் கடத்தியிருப்பேன். என்னை ஏற்றுக்கொள்வாயா?
இந்த சமூக பார்வையில் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளாதே!
அணைத்துப் படுத்து அழுத்திப் பிடித்து உழுது முடித்து இன்னொரு உடலை வெளியேற்றும் காமக் கடும்புனல் கூடத்தின் இயல்பே, காதல் தன்மையை கண்டதில்லை?
அவர்கள் பார்வையில் உரலும் உலக்கையும் தான். காமம் நோயாக இருக்குமானால் நாம் நம்மை தேடுவதற்கு அவசியமில்லை. நாம் காமம் கடந்த காதல். கலவு கடந்த மோதல்.
இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லை. இனியாவது நம்மை தேடுவதற்கு வாழ்க்கை செய்வோம் வா!
வயதான காலத்தில், மூக்குக் கண்ணாடியின் வழியே உன்னை எதிர்நோக்கும் விழிகளை நான் கொள்ள வேண்டும்.
நான் இன்னமும் இருக்கிறேன் என நீயும், நீ எனக்காகவே இருக்கிறாய் என நானும் வாழும் வாழ்க்கை அர்த்தமாகும்!
இனி, நாம் யார் என்பதை நாமே முடிவு செய்வோம். புதியதோர் உலகம் செய்வோம் வா!
ஸ்ரீ ஆகிய நான் உன்னை ஏற்க விரும்புகிறேன். விருப்பங்கள் விடைபெறும் நேரம்! ( காத்திருக்கும் நாட்குறிப்பில் என்னைக் கடந்த சில கவிதைகளில் நான்)
- அன்புடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக