எங்கே கலாச்சாரம்
அப்பழுக்கற்ற பவித்ரதத்தை போல ஊளையிடும் உயர்ந்த குடி மக்களே! காதலுக்கு கண்ணில்லை என்று சொன்னதே நீங்கள் தான். அப்புறம் எங்கே கலாச்சாரம் கறைபடிந்தது? எதை நீங்கள் கலாச்சாரம் என்று கருதுகிறீர்கள்? சிந்துசமவெளி நாகரீகத்தை மேம்படுத்த தான் நீங்கள் உழைக்கின்றீர்களா? மெசபடோமியாவின் பழக்கவழக்கங்களை பாதுகாக்க தான் பிறந்தீர்களா? லெமூரியாவின் பண்பாட்டை பண்படுத்த தான் படையெடுக்கிறீர்களா?
பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் கலாச்சாரம் என்ற தார்ப்பறியத்தை அறியாமல் அதெப்படி கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொல்கிறீர்கள் கலாச்சாரம் சீரழிகிறது என்று? மனித கழிவுகளை அகற்ற மனிதனை தேடும் நீங்கள் கலாசார காப்பகங்கள்?. கலப்படங்களை கலக்கம் இல்லாமல் சேர்க்கும் நீங்கள் பாதுகாவலர்கள்?. மனதில் மதிலிட்டு வீடுகளை தனிமைப்படுத்தி வீழும் நீங்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள். ஆனால் மற்றவர்கள் எல்லாம் சீர்குலைக்க வந்த சீர்கேடுகள்.
உங்களைப் பார்த்து சிரிப்பதை சகித்துக் கொள்ளாத நீங்கள் தான், சகிப்புத்தன்மை பற்றி மேடைபோட்டு வாய்கிழிய பேசுகிறீர்கள். உங்கள் பேச்சைக் கேட்டால் எனக்கு அருவருக்கத்தான் செய்கிறது. இதென்ன தேசம்? உங்கள் வரையறைகளை தாண்டிய வரலாற்றில் காணப்போன பக்கங்களில் நீங்கள் கூறும் அத்தனையும் உள்ளது. அப்படி மருவிய ஒன்றைத் தான் நீங்கள் காலங்காலமாக கொண்டாடும் யாவும்
அதெப்படி மொழிகளை கடந்து வந்த நீங்கள், இனத்தின் அடையாளம் இதுவல்ல என்று உரிமையுடன் வழக்காடுகிறீர்கள். கலாச்சாரமே உனக்காவது தெரியுமா இவர்கள் யாரென்று. பண்பாடே நீ உணர்ந்தாயா இவர்கள் பழக்கவழக்கங்கள் யாவென்று. நாகரீகமே நீயாவது சொல் இவர்களின் நவநாகரிக நரித்தனத்தை? மகரந்தச் சேர்க்கை தனிப்பட்ட உரிமை. அது பிறப்புரிமை. அதுவே தனிமனித சுதந்திரம்
பழக்கவழக்கங்களை பண்பாடாக மாற்றி அதை கலாச்சாரமாக முன்னெடுத்து பின்னாளில் நாகரீகமாக வளர்ந்த எதையும் நீங்கள் அழித்துவிட முடியாது. உங்களுக்கு நடந்தால் உறவு, மற்றவர்களுக்கு நடந்தால் காமமா. அழுக்குகள் கூட உங்களை கண்டால் அருவருக்கும், ஒருவேளை உங்கள் அனுமானங்களை காதுகொடுத்து கேட்டால்.
உங்கள் தகாத உறவுகள் அர்த்தப்படும் என்றால், என் உறவு அரத்தப்படாதா? உடலின் தேவையை குறிவைத்த உங்கள் உறவுகளை விட உயிரோட்டம் நிறைந்த என் காதல் ஒன்றும் இளைத்ததில்லை. படைத்த இறை பாலினம் யாதென தெரியாத நீங்கள் பாலின சமத்துவம் பற்றி பேசாமல் இருப்பது தான் நல்லது.
நவநாகரிக கலாச்சார சீர்திருத்தவாதிகளே நான் உரைப்பது கேட்டீறோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக