தூங்கிப்போன அதிகாலை
துயிலுரிக்காத சூரிய ஒளி
துவண்டு போன வாசல்
துருப்பிடிக்கும் வெண்கல வாளி
கைத்தடி கிடைக்காத துடைப்பம்
பேச ஆளில்லா கிணற்றடி
உடை மாற்றாத சோப்புக்கட்டி
குளிக்காத நேற்றைய துணிமணிகள்
வானவில் காணத நுரைகள்
வறண்டோடிய கழிவு வாய்க்கால்
தீண்ட உடல் இல்லாத சாம்பல்
சிரிக்க மறந்த பாத்திரங்கள்
தேக்கமில்லா பேசின் குளம்
ஓய்வெடுக்கும் மின்மோட்டார்
மூச்சு விடும் அடைப்பு குழாய்
கதகதப்பு இல்லா அடுப்பு
கத்த மறந்த கொதிஉலை
கொலை செய்யாத சமையலறை கத்தி
கோபம் கொள்ளாத மிளகாய் தூள்
தண்டனையில் தப்பித்த கல்உப்பு
மேலாடை அணிந்த பால்
முட்டிக்கொள்ளாத இஞ்சி
உடைபடாத பிஸ்கட் துண்டு
காபி டீ சத்தம் இல்லாத நாள்
சக்கரம் உடைந்தார்போல் என் கால்கள்
வலிக்காத தசைகளில் நான்
சுழலாத கண்களில் நான்
ஓடாத கால்களில் நான்
மறுத்துப்போகாத யோனியில் நான்
கிடைத்திடாத இந்த நாளில் நான்!
மனைவி, அம்மா என தியாகி பட்டம் வேண்டாம்!
என்னை என்னிடமிருந்து பிரித்து வைக்காமல் இருங்கள் போதும்!
கொஞ்சம் நான் நானாக வாழ்ந்து விட்டு போகிறேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக